சென்னை, ஆக. 15, 2026: 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய், பின்னர் சுதந்திர தின உரையாற்றினார். அப்போது, “தமிழகத்தை லஞ்சத்தில் இருந்தும், ஊழலில் இருந்தும் காப்பாற்றுவதும் ஒரு மிகப்பெரிய விடுதலைக்கு சமமானது. அதை நோக்கித்தான் நமது அரசு செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
மக்கள் நலனே முக்கியம்
சாதி, மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகள் உடைந்து அனைவரும் ஒன்றிணையும் இடத்தில்தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று குறிப்பிட்ட விஜய், வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை வழங்க தமிழக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். மத்திய அரசுடன் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பதாகவும், அதேநேரத்தில் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்கு எதிரான முடிவுகள் மற்றும் தமிழகத்திற்கு எதிரான கொள்கைகளை அரசு நிச்சயம் எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 3 மாதங்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.5,093.23 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாகவும், காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கப்படும் என்றும் கூறினார். மேலும், கோவில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், லஞ்சம் தொடர்பான புகார்களுக்கு புதிய வாட்ஸ்அப் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்கள்தான் ஆட்சியாளர்கள்
பொதுவாழ்வில் சமரசம் இருக்கக்கூடாது என்றும், மக்கள் நலனே அரசின் முக்கிய நோக்கம் என்றும் வலியுறுத்திய விஜய், “மக்கள்தான் ஆட்சியாளர்கள்; நானும் அனைவரும் மக்களின் சேவகர்கள்” என்று கூறினார். முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான நிதியுதவிகள் உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாகவும், 2036-ம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவும் உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 80-வது சுதந்திர தினம்: ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதல்வர் விஜய்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்