சென்னை, ஜூலை 14 2026: சென்னையின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் குடிமக்கள் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முக்கிய கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் கடிதத்தில், மொத்தம் 7 முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த கண்காணிப்பு (CCTV) கேமராக்கள் அமைத்தல், பேருந்து நிறுத்தங்களை நவீனமயமாக்குதல், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில், சிசிடிவி (CCTV), வைபை (Wi-Fi) மற்றும் 24 மணி நேரக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய 6 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.
- மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
- கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி விளையாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்த அம்பேத்கர் கலைக் கல்லூரிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும்.
- சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும்.
- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ‘தற்காலிகப் பணியாளர்களுக்கான’ (Gig Workers) ஓய்வறை அமைக்கப்படும்.
- அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் பயிலரங்கம் (Study Centre) உருவாக்கப்படும்.
- அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும்.
மேற்கூறிய அனைத்துப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், நகர்ப்புற உள்கட்டமைப்பை தரமானதாக மாற்றுவதுடன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு வசதிகளில் கண்கூடும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திட்டங்கள் காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படுவதையும் தொடர்ந்து கண்காணிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : “யாரையும் நாங்கள் அழைக்கவில்லை”… ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்