சென்னை, ஜூலை 4, 2026: தமிழக வெற்றிக் கழகம் (TVK) எம்.எல்.ஏ. ஒருவரை கட்சி மாறச் செய்வதற்காக பணம் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை மாநகர போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இருவரும் வருகிற ஜூலை 6-ஆம் தேதி விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்மன், கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்தில் வழங்கப்பட்டது. அவரது தந்தை சம்மனை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் என். இளையராஜா, தமக்கு ரூ.35 கோடி வழங்கி கட்சி மாற அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆளும் அரசை கவிழ்க்கும் நோக்கில் தவெக எம்.எல்.ஏ.க்களை கவர ரூ.180 கோடி வரை செலவிட திட்டமிடப்பட்டதாக வாக்குமூலங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தனது பெயர் தவறாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, செந்தில் பாலாஜியின் சகோதரர் வி. அசோக் குமார் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மறுபுறம், இந்த வழக்கில் தங்கள் கட்சி தலைவரை அரசியல் நோக்கத்துடன் சிக்கவைக்க முயற்சி நடைபெறுகிறது என்று தி.மு.க. தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க அ.தி.மு.க.வில் இருந்து வைகை செல்வன் விலகல்.. எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்