C.T.R Nirmal Kumar : தி.மு.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது; குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.
C.T.R Nirmal Kumar : தி.மு.க. குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது; குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க மு.க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Published on: July 2, 2026 at 1:14 am
Updated on: July 2, 2026 at 1:38 pm
சென்னை, ஜூலை 2, 2026: சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து, திமுகவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர், திமுகவும், மு.க.ஸ்டாலினும் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக தொடர்ந்து கூறி வந்தோம், அதை உறுதி செய்யும் வகையில் தவெக எம்எல்ஏவை திமுகவினர் தொடர்பு கொண்டு குதிரைப் பேரத்தில் ஈடுபட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுகவினர், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு ரூ.10 கோடி, ரூ.20 கோடி என பணம் கொடுத்து தங்கள் தரப்புக்கு ஆதரவாக இழுக்க முயன்றதாக குற்றம் சாட்டினார். இந்த முயற்சியை மறுத்த எம்எல்ஏக்களை தொடர்ந்து மிரட்டியதாகவும், புகாரின் பேரில் திமுக ஆதரவாளர்களான நரேஷ் மற்றும் தியாகராஜன் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
வரவிருக்கும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பல எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாகவும், திமுக ஆட்சிக் காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியும் திமுகவுடன் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜியின் நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பதால், இதில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்றும், இன்னும் எத்தனை பேர் இந்த குதிரைப் பேரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வரும் என்றும் நிர்மல் குமார் கூறினார்.
தொடர்ந்து அவர், திமுக ஆட்சியின் ஐந்தாண்டு கால மக்கள் விரோத நடவடிக்கைகளே தேர்தல் தோல்விக்கு காரணம். அதை உணர்ந்து மு.க.ஸ்டாலின் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும், திமுகவின் குதிரைப் பேரம் தொடர்பாக கைது நடந்ததும், ஆளுநருக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக எங்களுக்கும், குதிரைப் பேரத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை திமுக ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எம்எல்ஏக்கள் ராஜிநாமா தொடர்பாக வைகோ கூறிய கருத்து குறித்து, “நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறோம் என்பதையே வைகோ கூறினார். உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் சேருவது என்பது அவர்களது கட்சியும், சட்டமன்ற உறுப்பினர்களும் எடுக்க வேண்டிய முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம்” என்றார்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பிறர் மீதுள்ள வழக்குகள் குறித்து கேட்டபோது, “ஒருவர் கட்சியில் இணைவதால் அவர் மீதுள்ள வழக்குகள் நிறுத்தப்படாது. யார் மீது வழக்குகள் உள்ளனவோ, அவர்கள் மீது சட்டப்படி நடைபெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். எங்கள் கட்சி யாருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு அளிப்பதில்லை” என்று நிர்மல் குமார் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க : அண்ணாமலையை ஊட்டி வளர்க்கிறதா தி.மு.க? திருமுருகன் காந்தி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com