மும்பை, ஆக. 10, 2026: 33 வயதான இளம் நடிகை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 73 வயதான பாலிவுட் திரைப்பட இயக்குனர் ஷகீல் நூரானியை மும்பை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கோவிந்தா நடித்த ‘ஜோரு கா குலாம்’ (2000), சுனில் ஷெட்டி நடித்த ‘படே தில்வாலா’ (1999) போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய ஷகீல் நூரானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிக்கத் தலைமறைவாகி இருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் சுமார் 40 நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், புதிய திரைப்படத்தின் கதை குறித்துப் பேசுவதற்காக மும்பை மால்வாணி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஷகீல் நூரானி தங்களை அழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு வைத்துத் தனது பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தான் மயக்கம் தெளிந்து எழுந்தபோது அதைத் தனது செல்போனில் வீடியோவாகக் காட்டி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவைக் காட்டி கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததோடு, மாத்திரைகள் மற்றும் விஷம் கொடுத்து தனக்குக் கருச்சிதைவு ஏற்படுத்தியதாகவும் அப்பெண் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
புகார் பதிவானதைத் தொடர்ந்து ஷகீல் நூரானி தலைமறைவானதால், அந்தேரி லோகண்ட்வாலாவில் உள்ள அவரது மகனின் வீட்டிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
இறுதியாக, சைபர் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், மும்பையிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள மகாபலேஸ்வர் மலைப் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் அவர் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விரைந்த மும்பை காவல்துறையின் தனிப்படை சனிக்கிழமை அவரைப் பிடித்து மும்பைக்குக் கொண்டு வந்து முறைப்படி கைது நடவடிக்கையை மேற்கொண்டது.
கைது செய்யப்பட்ட ஷகீல் நூரானி மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை (பிரிவு 64(2)(m)), விஷம் கொடுத்து காயம் விளைவித்தல் (பிரிவு 123), கருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 88) மற்றும் கொலை மிரட்டல் (பிரிவு 351(2)) ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதுக்குப் பிறகு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வரும் ஆகஸ்ட் 12 வரை காவல் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்.. என்ன நடந்தது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்