Ashwathaman | “கலைக்கல்லூரிகள் கொலைக்கல்லூரிகள் ஆகிறது“ என பாரதிய ஜனதா மாநில செயலாளர் அஷ்வத்தாமன் கூறியுள்ளார்.
Ashwathaman | “கலைக்கல்லூரிகள் கொலைக்கல்லூரிகள் ஆகிறது“ என பாரதிய ஜனதா மாநில செயலாளர் அஷ்வத்தாமன் கூறியுள்ளார்.
Published on: October 9, 2024 at 8:44 pm
Ashwathaman | தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில செயலாளர் அஷ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த வன்முறையில் மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சமீப காலமாக மாணவர்களிடையே வன்முறை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை மக்களிடையே இது பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அது பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாத திராவிட மாடல் அரசு, விளம்பரம் செய்வதிலேயே கவனமாக இருந்து வருகிறது. ஏற்கனவே மாணவர்கள் பேருந்துகளில் அட்டகாசம் செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு பொது இடங்களில் கூரிய ஆயுதங்களை வைத்துக்கொண்டு கல்லூரி மாணவர்கள் சிலர் அராஜகம் செய்தனர்.
அப்பொழுதே இதன் மேல் உரிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. ஆனால், அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாத தமிழக அரசு, இன்றைக்கு ஒரு மாணவர் படுகொலை செய்யப்படுகிற நிலை வரை இந்த விஷயத்தைக் கொண்டுவந்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
திமுக ஆட்சி அமைகிற போதெல்லாம் மாணவர்களிடையே வன்முறை கலாச்சாரமும் அதிகரித்து வருவது வாடிக்கையாக உள்ளது. ஏற்கனவே கருணாநிதி அவர்கள் ஆட்சிக் காலத்தில் 2009 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மிக கோரமான ஒரு வன்முறை நிகழ்ந்தது.
அந்த வன்முறையை தொலைக்காட்சியில் கண்டு தமிழகமே அதிர்ந்து போனது .அந்த குறிப்பிட்ட வன்முறைக்கு முன்பாக ஒன்றரை ஆண்டுகளாகவே சட்டக் கல்லூரியில் பல்வேறு வன்முறைகள் நடந்த வண்ணம் இருந்தது. ஆனால் அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதிலேயே கவனமாக இருந்தது.
அப்பொழுது சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவனாக இருந்த நான், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக போராடினேன். அந்த பிரச்சனையை எவ்வளவு மோசமாக கையாளக் கூடாதோ அவ்வளவு மோசமாக கையாண்டது அப்போதைய திமுக அரசு.
‘அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளது’ என்று சொல்வதைப் போல, ஸ்டாலின் அவர்களும் மாணவர்கள் இடையே வன்முறை வெறியாட்டம் நடப்பதை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் அதை பற்றி எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.
திராவிட மாடல் அரசே இந்த மாணவர் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்க வேண்டும். சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகள் கொலை கல்லூரிகளாக மாறாமல் தடுக்க தமிழக காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறைக்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியை விடுத்து எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் எதிர் கருத்தை சார்ந்தவர்கள் மீது எந்தெந்த மாதிரியான பொய் வழக்கை போடலாம் என்கிற மிக முக்கியமான பணியை திராவிட மாடல் அரசு கொடுத்துள்ளது.
அந்தப் பணியை செய்வதற்கே தமிழக காவல்துறைக்கு நேரம் சரியாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை கவனிப்பதற்கோ போதை பரவலை கட்டுப்படுத்துவதற்கோ நேரம் கிடைக்கவில்லை போலும்.
கல்லூரி மாணவர்கள் கையில் ஆயுதம் ஏந்துவதற்கு போதையும் ஒரு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. தமிழக முழுவதும் தெருவுக்கு தெரு, டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்து சாராயம் விற்று சம்பாதிக்கிற ஒரு அரசாக திராவிட மாடல அரசு இருந்து வருகிறது.
வழக்கமாக அரசாங்கங்கள் மாணவர்கள் படிப்பதற்கு தான் டார்கெட் வைக்கும். ஆனால் திராவிடம் மாடல் அரசு குடிப்பதற்கு டார்கெட் வைக்கிறது. சென்னை மாநகரம் முழுவதும் கஞ்சா போதைப்பொருள் பரவல் பெரிய அளவில் இருக்கிறது. இவை எல்லாம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும்.
பச்சையப்பன் கல்லூரி மாநிலக் கல்லூரி பகுதிகளில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும். இந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு யோகா வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அந்த மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு தனித்தனியே பயிற்சி மையங்கள் மாநில அரசின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com