மியாமி, செப். 7, 2026: அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்துக்காக இயக்கப்பட்ட சரக்கு விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமேசான் பிரைம் ஏர் விமானம் 7598, புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் இருந்து மியாமிக்கு வந்தது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணியளவில் தரையிறங்கியபோது ஓடுபாதையை கடந்து சென்ற விமானம், அருகில் இருந்த பல வாகன்கள் மீது மோதியது. தொடர்ந்து விமானத்தில் தீப்பிடித்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
விபத்து ஏற்பட்டதும் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விமானத்தின் காக்பிட்டில் விமானி மற்றும் துணை விமானி சிக்கியிருந்ததாகவும், சிலர் வாகனங்களுக்குள் சிக்கியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டதால், மீட்புப் பணிகளும் தீயணைப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) விசாரணையைத் தொடங்கியுள்ளன. அமேசான் நிறுவனம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரான்ஸ் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில்! இந்தியா–பிரான்ஸ் உறவுக்கு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்