புதுடெல்லி, ஆக. 4 2026: டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் NEET வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகள் மாணவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை சட்ட நடைமுறைகளின்படி முடிக்கவோ அல்லது வழக்குகளை வாபஸ் பெறவோ முடியும் என்று விளக்கம் அளித்தது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு இந்தக் கருத்தை தெரிவித்தது.
கடந்த ஜூலை 28-ஆம் தேதி வழங்கப்பட்ட உத்தரவில், “குற்றப் பின்னணி கொண்டவர்கள்” மீது வழக்குகளை தொடரலாம் என்று கூறியிருந்தது.
இதுகுறித்து ஏற்பட்ட குழப்பத்தை நீக்கிய நீதிமன்றம், அந்த உத்தரவு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான மற்றும் கொடூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தியது. மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளுக்கும் அது பொருந்தாது என்றும் கூறப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எஃப்.ஐ.ஆர்.-ஐ நேரடியாக “வாபஸ் பெற” குற்றவியல் சட்டத்தில் நடைமுறை இல்லை என்றும், அதற்கு பதிலாக முடிவு அறிக்கை தாக்கல் செய்தல், வழக்கை வாபஸ் பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தல் அல்லது வழக்கை ரத்து செய்ய கோருதல் போன்ற சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் விளக்கினார்.
இதையடுத்து, போராட்டங்களின் போது பெல்லெட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகள் குறித்து விரிவான வழிகாட்டுதலை உருவாக்கப் போவதாக தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். மேலும், போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பது அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை நியமிப்பது குறித்தும் நீதிமன்றம் பரிசீலித்து வருவதாக கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : மேற்கு வங்க முதலமைச்சர் உயிருக்கு குறி.. ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்