Anbumani Ramadoss : வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்துவதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
Anbumani Ramadoss : வேளாண் வளர்ச்சியை பாதிக்கும் திமுக அரசின் திட்டத்தை செயல்படுத்துவதா? உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Published on: June 21, 2026 at 9:20 pm
சென்னை ஜூன் 21, 2026; பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியால் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டதை செயல்படுத்துவதற்கும், இந்தத் திட்டத்தின்படி வேளாண் துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பட்டியலிட்டும் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் துறை அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, உழவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த த.வெ.க. அரசு முயல்வது நியாயமல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளின் பணிகளும், நோக்கங்களும் வெவ்வேறானவை.
அதை கருத்தில் கொண்டு தான் 1979-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒன்றாக இருந்த இந்தத் துறைகள் காலப்போக்கில் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. ஆனால், உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் இந்தத் துறைகளில் பணியாற்றும் கள அதிகாரிகள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, அனைத்துத் துறை பணிகளையும் செய்ய வேண்டும் என்று 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் நாள் திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அப்போதே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது” என குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “முந்தைய ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் முதன்மையானது வேளாண் துறை. கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகிறது.
அத்தகைய அரசால் உருவாக்கப் பட்டு உழவர்கள் மற்றும் வேளாண் அதிகாரிகளின் எதிர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு திட்டத்தை புதிய அரசு செயல்படுத்தக் கூடாது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வேளாண் துறை வீழ்ச்சிக்கு வழிவகுத்து விடக் கூடாது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு.. வைகோ வெளியிட்ட அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com