Mekedatu Dam : மேகதாதுவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர்வள ஆணையம் (CWC) நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.
Mekedatu Dam : மேகதாதுவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 67.14 டி.எம்.சி கொள்ளளவில் புதிய அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர்வள ஆணையம் (CWC) நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது.

Published on: July 30, 2026 at 3:48 pm
புதுடெல்லி, ஜூலை 30, 2026: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேகதாது திட்டத்திற்காக கர்நாடக அரசு தயாரித்து கடந்த ஜூன் 7-ம் தேதி மத்திய நீர்வளத் துறை ஆணையத்தின் தலைமைப் பொறியாளருக்கு அனுப்பி வைத்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஜூன் 29-ம் தேதியே திருப்பி அனுப்பி நிராகரித்துள்ளது. ‘பூவுலகின் நண்பர்கள்’ சுற்றுச்சூழல் அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு அளித்த பதிலின் மூலம் இந்தத் தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கர்நாடகாவின் ராமநகரம் மாவட்டம், கனகபுரா அருகே காவிரி மற்றும் அர்க்காவதி ஆறுகள் சங்கமிக்கும் மேகதாது பகுதியில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 67.14 டி.எம்.சி (TMC) கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டிருந்தது.
ஏற்கனவே கர்நாடக காவிரிப் படுகையில் கிருஷ்ணராஜசாகர் (KRS), கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகள் இயங்கி வரும் நிலையில், இந்த 5-வது அணையும் கட்டப்பட்டால் கர்நாடகாவின் மொத்த நீர் சேமிப்புத் திறன் 171.73 டி.எம்.சி-யாக உயர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேகதாது அணை கட்டப்பட்டால்தான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரைப் பகிர முடியும் என்றும், பெங்களூரு நகரக் குடிநீருக்காக 16.1 டி.எம்.சி நீரைத் திருப்ப முடியும் என்றும் கர்நாடக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், இந்த வாதங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதோடு, காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு மற்றும் 2018-ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய மத்திய நீர்வள ஆணையம், இந்த அறிக்கையை நிராகரித்து, விதிகளுக்குட்பட்டு மீண்டும் புதிதாக DPR தயாரித்து வழங்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய நீர்வள ஆணையத்தின் இந்த அதிரடி முடிவு மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் சட்டவிரோத முயற்சிகளுக்குக் கிடைத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழக அரசு உடனடியாகச் சட்ட வல்லுநர்களுடன் தீவிரமாக ஆலோசித்து, மேகதாது அணை திட்டத்தை முழுமையாகக் கைவிடச் செய்யும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதே காவிரி டெல்டா விவசாயிகளின் முதன்மை எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க : வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் குற்றம்.. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com