புதுடெல்லி, செப்.1, 2026, ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரங்களில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான இந்திய வாள்வீச்சு அணியை இந்திய வாள்வீச்சு சங்கம் அறிவித்துள்ளது. மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒலிம்பியன் சி.ஏ. பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.
பெண்களுக்கான சாப்ரே (Sabre) பிரிவில் பவானி தேவி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 2026-ம் ஆண்டின் ஆசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப், உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் தேசிய தரவரிசை அடிப்படையில் அணி தேர்வு செய்யப்பட்டதாக இந்திய வாள்வீச்சு சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பவானி தேவி மீண்டும் ஆசிய விளையாட்டு போட்டியில் களம் காண உள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் தனிநபர் சாப்ரே பிரிவில் பவானி தேவி 5-வது இடம் பிடித்திருந்தார். மேலும், 2023-ம் ஆண்டு ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று, அந்த தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் படைத்திருந்தார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து செப்டம்பர் 16-ம் தேதி அய்ச்சி-நகோயாவுக்கு இந்திய வாள்வீச்சு அணி புறப்பட உள்ளது. இதில் பவானி தேவியின் அனுபவம் இந்திய அணிக்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வைபவ் ரெட்-பால் கவனம் அவசியம்.. பயிற்சியாளர் மனீஷ் ஓஜா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்