புதுடெல்லி, செப்.1, 2026: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக ஹேக்கில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றம் ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தியா ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முன்வைத்த காரணங்கள், அந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தவோ அல்லது இடைநிறுத்தவோ போதுமானவை அல்ல என்றும், ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது கடமைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறியது.
இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சகம், ‘சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக’ கருதப்படும் இந்த மத்தியஸ்த நீதிமன்றத்தை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் இந்தியா பங்கேற்கவில்லை என்றும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு முரணாகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. எனவே, இந்தியாவின் இறையாண்மை முடிவுகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் தொடர்பாக இந்த நீதிமன்றத்துக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 23-ம் தேதி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ‘நிலுவையில்’ வைப்பதாக அறிவித்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாகக் கூறி, தேசிய பாதுகாப்பு காரணங்களை இந்தியா முன்வைத்தது. இந்த நிலையில், இந்தியாவின் ஒப்பந்தத்தை நிலுவையில் வைக்கும் முடிவு தொடரும் என்றும், ஹேக் மத்தியஸ்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இந்தியாவின் இறையாண்மை முடிவுகளிலோ, நீர் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரட்லே நீர்மின் திட்டம் தொடர்பாகவும் மத்தியஸ்த நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட அளவைத் தாண்டி அணையின் சுவர் மற்றும் மின் நீரெடுப்பு கட்டமைப்பில் கான்கிரீட் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என இந்தியாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரட்லே உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவகாரங்கள் உலக வங்கி நியமித்துள்ள நடுநிலை நிபுணர் முன்பும் தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன; அந்த நிபுணரின் இறுதி முடிவு 2027 ஜூலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ₹12,000 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தும்.. கனிமவள திருத்த சட்டம்.. நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்