செயின்ட் லூயிஸ், ஆக 8, 2026: அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் (GCT) ரேபிட் மற்றும் பிளிட்ஸ் தொடரில், 20 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா தனது முதல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளார். போட்டி முடிவடைய ஒரு சுற்று மீதமிருந்தநிலையிலேயே பட்டத்தை உறுதி செய்த பிரக்ஞானந்தா, மொத்தமாக 23.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். உலக சாம்பியன்ஷிப் சுற்றின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ்22 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் வெஸ்லி சோ 20.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
ரேபிட் பிரிவில் சிந்தரோவை விட சிறிய முன்னிலையுடன் முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா, பிளிட்ஸ் பிரிவில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்தார். 18-க்கு 11.5 புள்ளிகள் பெற்று தனது ஒட்டுமொத்த முன்னிலையை தக்க வைத்துக்கொண்டார். இறுதி நாளில் எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாமல் பட்டத்தை கைப்பற்றியது அவரது வெற்றியை மேலும் சிறப்பாக்கியது.
இந்த வெற்றியின் மூலம் Grand Chess Tour (GCT) ஒட்டுமொத்த தரவரிசையில் பிரக்ஞானந்தா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள கிராண்டு ஃபைனலில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், பிரான்ஸ் வீரர் அலிரெசா ஃபிரோஜா GCT-யில் இருந்து விலகியதால், இதுவரை அவர் பெற்ற புள்ளிகள் முன் ஒப்பந்த விதிகளின்படி நீக்கப்பட்டுள்ளன. இதுவும் பிரக்ஞானந்தாவின் தரவரிசை முன்னேற்றத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்த சீசனின் கடைசித் தொடரான கிளாசிக்கல்போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதில் முதல் மூன்று இடங்களுக்குள் பிரக்ஞானந்தா நிறைவு செய்தால், அது அவருக்கு மற்றுமொரு மிகப்பெரிய சாதனையாக அமையும். நடப்பாண்டின் தொடக்கத்தில் மாஃக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி நார்வே கிளாசிக்கல் பட்டத்தைக் கைப்பற்றிய பிரக்ஞானந்தா, அதே ஃபார்மை இத்தொடரிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஆசிய இளையோர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்.. இந்தியாவுக்கு வெள்ளி! டிட்லி மாஜி அசத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்