26 நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்த சோனம் வாங்சுக்..போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு கிடையாது.. மத்திய அரசு உறுதி!
Sonam hunger strike end : நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் உயர்கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவாகாது என்றும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளதாக சோனம் வாங்சுக் தெரிவித்தார்.
புதுடெல்லி, ஜூலை 24, 2026 : நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்கல்வித் துறையில் தீவிர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடந்த 26 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நள்ளிரவில் தனது போராட்டத்தை அதிகாரபூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்தார்.
குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசி, அரசின் உறுதியை அளித்ததைத் தொடர்ந்து அவர் தனது போராட்டத்தை நிறைவு செய்தார்.
உண்ணாவிரதத்தை முடித்த சில மணி நேரங்களிலேயே, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சோனம் வாங்சுக், மத்திய அரசு தனக்கு அளித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழி கடிதத்தையும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில், புதுடெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் ங்கேற்றவர்கள் மீது எந்தவித காவல் துறை வழக்குகளும் பதிவு செய்யப்படாது என்ற நோக்கில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
END OF HUNGER… BEGINNING OF ACCOUNTABILITY…! Sonam Wangchuk ends his fast after 26 days upon getting assurance from the government and members of parliament of all political parties that the issue of accountability in the failing examination system will be discussed on the… pic.twitter.com/0C9YX5VlsL
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அதன்படி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தற்போதைய தேர்வு முறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும், வருங்காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காதவாறு தேர்வு அமைப்பில் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.
மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதி இழப்பீடு வழங்குவது குறித்து மத்திய அரசு மிகவும் சாதகமான முறையில் பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மாணவர்களுக்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சோனம் வாங்சுக் தனது போராட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.