தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
February 6, 2025
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
Published on: August 27, 2024 at 7:31 am
“உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதலமைச்சர் உலக முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் என்ன? அதன்மூலம் உருவான வேலை வாய்ப்புகள் என்ன? என்பது தொடர்பான விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உள்நாட்டு முதலீடுகளையே தக்கவைக்க முடியாத முதலமைச்சர் உலக முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொள்வது வேடிக்கையானது மூன்றாண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதன் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அமெரிக்கா செல்லும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான குழு, அந்நாட்டில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளில் ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட முதலீடுகளிலும் அதனால் உருவாகும் என சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் பாதியளவு கூட செயல்பாட்டிற்கு வராத நிலையில் முதலமைச்சரின் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின் போது ரூ.6,100 கோடி ரூபாய்க்கு முதலீடுகளும், அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் என முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாடுகளின் பட்டியல் நீள்கிறதே தவிர, அங்கு ஈர்க்கப்பட்டதாக கூறப்பட்ட முதலீடுகளும் உறுதியளித்த வேலைவாய்ப்புகளும் சிறிதளவும் முன்னேற்றமின்றி அதே இடத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
அதே போல, உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனும் பெயரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விளம்பர மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதில் எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன? எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது என்ற விவரங்களை வெளியிட தமிழக அரசு மறுக்கிறது.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே தொழில் தொடங்கிய நிறுவனங்களும், தொழில் தொடங்குவதாக உறுதியளித்துள்ள நிறுவனங்களும் தற்போது அண்டை மாநிலங்களை நோக்கி செல்லும் சூழல் இருப்பதாக தொழில்துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் அண்மையில் தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய பிரதேச முதலமைச்சர் அவர்களின் அழைப்பை ஏற்று கோவை, திருப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்கள் இடம்பெயா திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியுள்ளன? அதன் மூலம் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது? என்ற விவரங்களை வெளியிடுவதோடு, தமிழகத்தைச் சேர்ந்த எந்தவொரு நிறுவனமும் அண்டை மாநிலங்களை நோக்கிச் செல்லாத வகையில், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தருமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com