சென்னை, டிச. 27 2025: சென்னையில் பணி பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியம் கோரி பேரணி சென்ற தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர்; இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஹிட்லரின் ஆட்சி வீழ்த்தப்படுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கையில் அவர் மேலும், “சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கக் கோரியும் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
அதேபோல், சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது திமுக அரசு மீண்டும், மீண்டும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “திமுகவினரிடையே ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று ஆட்சிக்கு வந்த பிறகு ஆயிரம் முறை மு.க.ஸ்டாலின் கூறியிருப்பார். ஆனால், சென்னை மாநகராட்சி, மதுரை மாநகராட்சி உள்பட திமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. கனிமக் கொள்ளை ஊழல், அதிகாரிகள் நியமன ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல், கட்டிட அனுமதி ஊழல், போக்குவரத்து ஒப்பந்த ஊழல், குப்பை அள்ளும் ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் என கிட்டத்தட்ட பெரும்பாலான அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. சில ஊழல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அமலாக்கத்துறையே ஆதாரங்களை அனுப்பியுள்ளது.
அவர்களுக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பதற்கு திறனும், துணிச்சலும் இல்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த பலமும் இல்லாத அடித்தட்டு மக்களான தூய்மைப் பணியாளர்களிடமும், இடைநிலை ஆசிரியர்களிடமும் மட்டுமே தமது வீரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். அவரது சர்வாதிகாரம் நீதிக்கு எதிராக மட்டும் தான் பாயும் போலத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 13 விழுக்காட்டை மட்டுமே நிறைவேற்றி படுதோல்வி அடைந்த அரசு திமுக அரசு தான். ஊழல்வாதிகளை உலவ விட்டு, அடித்தட்டு மக்களுக்கு எதிராக மட்டும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் நவீன ஹிட்லர் ஆட்சி இந்த முறை மக்களால் வீழ்த்தப்படுவது உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க; நேருக்கு நேர் மேடை ஏற தயாரா? மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி சவால்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்