CM Vijay: மகளிர் இடஒதுக்கீடு சலுகை அல்ல; அது சமூக நீதி என தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறினார்.
CM Vijay: மகளிர் இடஒதுக்கீடு சலுகை அல்ல; அது சமூக நீதி என தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறினார்.

Published on: August 12, 2026 at 1:06 pm
சென்னை, ஆக.12, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை தொடர்பான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்து உரையாற்றினார். அவர், “பெண்களுக்கு அரசியலில் சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வது காலத்தின் கட்டாயமாகும்” என்று வலியுறுத்தினார். தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் அநீதி ஏற்படும் என்பதால், இதனைத் தடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட ஆறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சம் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைத்திருப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான தொகுதி பகிர்வை நிலைநிறுத்துவதற்கும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் விகிதத்தை 2:2:1 என்ற அளவிலேயே வைத்திருப்பதற்கும் உரிய சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், பெண்கள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி, 2029 மக்களவைத் தேர்தலிலேயே மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முதலமைச்சர் விஜய், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது சலுகை அல்ல, அது சமூக நீதி மற்றும் அரசியலமைப்பு வழங்கிய சமத்துவ உரிமையின் அடிப்படையிலானது என்று குறிப்பிட்டார். நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேர் பெண்கள் என்பதால், அவர்களுக்கு அரசியலில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் பெண்களின் வாக்குப்பதிவு ஆண்களை விட அதிகமாக இருந்தாலும், அவர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 12 பெண் உறுப்பினர்கள் இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தாலும், மொத்த உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் பங்களிப்பு சங்ககால இலக்கியம் முதல் சுதந்திரப் போராட்டம் வரை, கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் மிகப்பெரியதாக இருந்து வந்துள்ளது என்று முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அவ்வையார், கண்ணகி, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ராணி வேலுநாச்சியார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கியமான ஆளுமைகளாக அவர் எடுத்துக்காட்டினார்.
இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்த விவாதம் சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்றது.
இதையும் படிங்க : மக்களவை இடங்கள் 543, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா.. தமிழக முதலமைச்சர் விஜய் ஆதரவு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com