புதுடெல்லி, ஆக. 8 2026: ஐஐடி டெல்லியின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் தங்களின் ஒவ்வொரு முடிவிலும் தேச நலனை மையமாகக் கொண்டு, தங்களின் செயல்பாடுகள் நாட்டுக்கு எவ்வாறு பயனளிக்கும், நாட்டின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யும் என்பதை சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஒவ்வொரு தலைமுறையும் தங்களது காலத்திற்கே உரிய சவால்களை எதிர்கொள்வதுடன், நாட்டுக்கான தனிப்பட்ட பொறுப்பையும் ஏற்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
‘விக்சித் பாரத்’ பயணத்தில் மாணவர்களின் பங்கு!
பட்டம் பெறும் மாணவர்கள் அடுத்த 30 முதல் 35 ஆண்டுகளில் மேற்கொள்ளும் பணிகள், இந்தியா ‘விக்சித் பாரத்’ என்ற இலக்கை நோக்கி பயணிப்பதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டில் தற்போது புதிய துறைகள் உருவாகி வருவதால் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார். குறிப்பாக செமிகண்டக்டர், விண்வெளி, ட்ரோன் உள்ளிட்ட துறைகளை சுட்டிக்காட்டிய பிரதமர், அனைத்து துறைகளிலும் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
சமூக வலைதளங்களின் காலத்தில் மாணவர்கள் பல்வேறு கவனச்சிதறல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றும் பிரதமர் கூறினார். சம்பள பாக்கேஜ், வேலை அல்லது பணிபுரியும் துறையை அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார். “வாழ்க்கை ஒரு லீடர்போர்டு அல்ல” எனக் குறிப்பிட்ட மோடி, மற்றவர்களுடன் போட்டியிடுவதை விட, முந்தைய நாளைவிட ஒவ்வொரு நாளும் தங்களை மேம்படுத்திக் கொள்வதே முக்கியம் என வலியுறுத்தினார்.
IIT டெல்லியில் ‘பரம் பிரக்யா’
பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி அமைச்சர் பிரதான் ஜோஷி, ஐஐடி டெல்லி ஆளுநர் குழுத் தலைவர் ஹரிஷ் சால்வே, ஐஐடி டெல்லி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவையொட்டி, ஐஐடி டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள ‘பரம் பிரக்யா’ (Param Pragya) என்ற உயர் செயல்திறன் கணினி வசதியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இனி புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை? அரசு அதிரடி முடிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்