சென்னை, ஆக 7 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்த விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், காவிரி நீர் விவகாரத்தில் அரசியல் செய்யும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். காவிரி நமக்கு உயிர் ஆதாரம் என்றும், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற யோசனையை முதலில் முன்வைத்தது தான்தான் என்றும் அவர் கூறினார்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேகதாது தொடர்பான தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலுக்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாகவும் அவர் கூறினார். மேலும், கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக 1969-ம் ஆண்டிலேயே தமிழக சட்டசபையில் விவாதங்கள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெங்களூரு பயணம் ஏன்? காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரே நோக்கத்தில்தான் பெங்களூரு செல்ல முடிவு செய்ததாக முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்தார். கர்நாடக முதலமைச்சருடன் நேரடியாக பேசி பார்ப்போம் என்ற நல்ல எண்ணத்திலேயே இந்த முயற்சியை மேற்கொள்ள நினைத்ததாகவும், பகை நாடுகள்கூட பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் நிலையில், அண்டை மாநிலத்துடன் பேசி பார்ப்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.
பெங்களூரு சென்றால் தனக்கு அவமானம் ஏற்பட்டால் என்ன செய்வது என சிலர் கேட்டதாகவும், ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்ள தான் தயாராக இருந்ததாகவும் விஜய் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் சட்டசபையில் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க : தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்