ராய்ப்பூர், ஜூலை 5, 2026: பத்ம விபூஷண் விருது பெற்ற, பண்டவானி (Pandavani) நாட்டுப்புறக் கலைஞரும், இந்தியாவின் தலைசிறந்த நாட்டுப்புறக் கலை ஆளுமைகளில் ஒருவருமான தீஜன் பாய் (Teejan Bai) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை 3.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சத்தீஸ்கரின் பாரம்பரியமான பண்டவானி கலை வடிவத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதில் தீஜன் பாயின் பங்கு மிகப்பெரியது. மகாபாரதக் கதைகளை இசையுடனும், நாடகத் தன்மையுடனும் எடுத்துரைக்கும் இந்தக் கலை வடிவில் பெண்கள் அரிதாகவே ஈடுபட்டிருந்த காலத்தில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய ‘கபாலிக்’ பாணியில் மேடையேறி புதிய வரலாறு படைத்தவர். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தி பண்டவானி கலைக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.
தீஜன் பாயின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “புகழ்பெற்ற பாண்டவாணிப் பாடகி திஜன் பாய் ஜியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தீஜன் பாயின் பிரிவு இந்தியக் கலை மற்றும் கலாசார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தனது அபாரமான நிகழ்ச்சிகள் மூலம் சத்தீஸ்கரின் பண்டவானி கலைக்கு உலகளவில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியவர். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1956-ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் கனியாரி கிராமத்தில் பிறந்த தீஜன் பாய், சிறுவயதிலேயே பண்டவானி கலையில் ஈடுபட்டு பின்னர் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். இந்திய நாட்டுப்புறக் கலை மரபை உலக அரங்கில் உயர்த்திய அவரது பங்களிப்பு தலைமுறைகளைத் தாண்டி நினைவுகூரப்படும் என்று கலை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க பெருவின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்