Anbumani Ramadoss: சிப்காட் என்ற பெயரில் கடலூரை நச்சுக்
காடாக மாற்றுவதா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: சிப்காட் என்ற பெயரில் கடலூரை நச்சுக்
காடாக மாற்றுவதா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

Published on: November 18, 2025 at 7:10 pm
சென்னை, நவ.18, 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் முழுவதும் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியாகும் நச்சுக் கழிவுகளால் அப்பகுதி வாழத்தகுதியற்ற பகுதியாக மாறி வரும் நிலையில், அங்கு 1119 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு சிப்காட் வளாகத்தை அமைப்பதற்காக விளைநிலங்களை பறிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடலூர் மக்களை வாழவே விடக்கூடாது என்ற நோக்குடன் வாழ்வாதாரப் பறிப்பு, நச்சுச் சூழலை உருவாக்குவது என இரட்டைத் தாக்குதலை நடத்துவது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கடலூர் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களாலும், நிலக்கரி சாம்பல் பறப்பதாலும் விவசாயமும், மனிதர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். என்.எல்.சி சுரங்கங்களால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்குப் பிறகு மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டமாக கடலூர் உருவெடுத்திருக்கும் நிலையில், அதை மேலும், மேலும் நச்சுக் காடாக்கும் வகையில் 1119 ஏக்கரில் சிப்காட் வளாகம் அமைக்கத் துடிப்பதை ஏற்கவோ, மன்னிக்கவோ முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : டிசம்பர் 17 வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்.. அன்புமணி அறிவிப்பு
தொடர்ந்து, “சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் வகையிலுமான திட்டங்கள் காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டால், ‘‘நானும் டெல்டாக்காரன்’’ என்றும், மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டால்,‘‘உங்களுக்காக முதல்வர் பதவியையே தூக்கி எறிவேன்’’ என்று முழக்கமிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடலூர் மாவட்டத்தில் மட்டும் மத்திய அரசின் சுரங்கத் திட்டங்கள் செயல்படுத்தப் படுவதை வேடிக்கைப் பார்ப்பதுடன், மாநில அரசின் சார்பிலும் நச்சுத் திட்டங்களை செயல்படுத்துவது ஏன்? கடலூர் மாவட்டத்தின் மீதும், அங்குள்ள மக்கள் மீதும் முதலமைச்சருக்கு அப்படி என்ன வன்மம்?
கடந்த காலங்களில் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சி தான் காக்கும் சக்தியாக இருந்து மக்களின் நலன்களை பாதுகாத்திருக்கும். சிப்காட்டுக்காக நிலங்களை பறிக்கும் திட்டத்திற்கு எதிராகவும் அந்தக் கடமையை பா.ம.க. நிறைவேற்றும். மக்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதுடன், சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சிப்காட் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களுக்காக நானே களமிறங்கி போராட்டம் நடத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை.. கருத்துக் கேட்புக்கு விலக்கு அளிப்பதா? அன்புமணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com