Dr Ramadoss: தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளதாக மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Dr Ramadoss: தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டுள்ளதாக மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on: May 4, 2025 at 8:59 pm
சென்னை, மே 4 2025: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் 34 படகுகளை உடைத்து ஆழ்கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் நோக்குடன் இலங்கை அரசு செயல்படுத்தவுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை
மேலும், “இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் கடல்வளத்துறை சார்பில் அந்நாட்டு அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையில், இலங்கை கடல் பகுதியில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்குடன் ஆழ்கடலில் செயற்கையான பவளப்பாறைகளை வளர்க்கலாம்; இதற்காக முதற்கட்டமாக 34 படகுகளை உடைத்து மூழ்கடிப்பதன் மூலம் பவளப்பாறைகளை எளிதாக வளர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசின் முதன்மை நோக்கம் பவளப்பாறைகளை வளர்த்து மீன்வளத்தைப் பெருக்குவது என்பதை விட, தமிழக மீனவர்களின் படகுகளை சிதைத்து, அவற்றை அவர்களுக்கு ஒருபோதும் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக ஒழிப்பது தான். இலங்கை அரசின் இந்தத் திட்டம் செயல்வடிவம் பெற்றால் தமிழக மீனவர்கள் வாழ வழியின்றி வாட நேரிடும்.
தமிழக மீனவர்கள் சிறை
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஆண்டுக்கணக்கில் சிறை வைப்பது, கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிங்கள அரசு, அதன் அடுத்தக்கட்டமாகத் தான் படகுகளை சிதைத்து மூழ்கடிக்கும் திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது.
2021-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான நான்காண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 174 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 34 படகுகளை அழிக்கத் திட்டமிட்டுள்ள இலங்கை அரசு, அடுத்தடுத்தக் கட்டங்களில் மீதமுள்ள படகுகளையும் அழிக்க முனையும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்கும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் இலங்கை அரசிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : வக்ஃப் திருத்தச் சட்டம்; மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க பதில் மனு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com