சென்னை, ஜூன் 20 2025: அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து காவலர்களை வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் 389வது வாக்குறுதியாக இடம்பெற்றிருந்த காவலர்களுக்கு இருபது ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு முரணாக அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” எனக் கூறியுள்ள டி.டி.வி தினகரன், “ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அனைத்து காவலர்களுக்கும் வாரவிடுப்பு, மாவட்ட அளவில் காவலர்கள் குறைதீர்க்கும் அமைப்பு என அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு, அறிவிக்காத வாக்குறுதியாக பதவி உயர்வை தடுத்திருப்பது காவலர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, 2002 முதல் 2010 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : 30,000 பேருக்கு ரூ.3000 வரை ஊதியம் சுரண்டல்.. அன்புமணி பகீர் புகார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்