மும்பை, செப்.5, 2026: இந்தியாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பு $11.48 பில்லியன் உயர்ந்து $740.8 பில்லியனாகப் பதிவானது. இதற்கு முன் வாரத்தில் $12.42 பில்லியன் உயர்ந்து $729.33 பில்லியனாக இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த அளவான கையிருப்பு உருவானது.
இந்த உயர்வின் முக்கிய காரணம் இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்திய எஃப்.சி.என்.ஆர் (FCNR-B) வைப்பு சாளரம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் பணத்தை டாலர், யூரோ, பவுண்ட் போன்ற நாணயங்களில் இந்திய வங்கிகளில் வைப்புத் தொகையாகச் செலுத்தினர். RBI வழங்கிய சிறப்பு டாலர்-ரூபாய் சுவாப் வசதி வங்கிகளுக்கு நாணய ஆபத்தை குறைத்தது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வங்கிகள் $127.22 பில்லியன் அளவிலான எஃப்.சி.என்.ஆர்(B) வைப்புகளைச் சேகரித்தன.
இதற்குப் பிறகும், வெளிநாட்டு நாணயக் கடன்கள் மூலம் $5.26 பில்லியன், வெளிநாட்டு வணிகக் கடன்கள் மூலம் $3.89 பில்லியன் வந்தது. மொத்தமாக $136.37 பில்லியன் அளவிலான நாணய வரவுகள் ஏற்பட்டன. RBI எதிர்பார்த்த $80 பில்லியனை விட இது மிக அதிகம்.
ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன், வெளிநாட்டு நாணயச் சொத்துகள் $600.67 பில்லியன் ஆக உயர்ந்தன. தங்கக் கையிருப்பு $116.41 பில்லியன் ஆக இருந்தது. SDR $18.81 பில்லியனாகவும், IMF-இல் இந்தியாவின் நிலை $4.91 பில்லியனாகவும் இருந்தது. தங்கக் கையிருப்பு பிப்ரவரி மாத உச்சமான $131.63 பில்லியனை விட குறைவாக இருந்தாலும், நாணயச் சொத்துகள் அதிகரித்ததால் மொத்த கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியது.
இந்த வலுவான டாலர் வரவுகள் வங்கித் துறையில் ரூபாய் திரவத்தன்மையை அதிகரித்தன. ஆகஸ்ட் இறுதியில் சிஸ்டம் திரவத்தன்மை ரூ.6.7 லட்சம் கோடியிலிருந்து செப்டம்பர் 2-ஆம் தேதியுடன் ரூ.9.7 லட்சம் கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரிலையன்ஸ் ஜியோ ஐ.பி.ஓ… மதிப்பு என்ன? முழு விவரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்